ஞாயிறு, 17 ஜூலை, 2016

அனாகதம் நான்காவது சக்கரம்.

          அனாகதம் (நெஞ்சகம்) இது மணிப்பூரகத்திற்கு மேல் பத்து விரலளவு உள்ளது இது இதயக்கமலமாகும். தேயு நிலையில் முக்கோனமாய் இருக்கும் முக்கோணத்தின் நடுவில் பண்ணிரு இதழுடைய மலர் வட்டமும், அதன் நடுவில் "சி"கார " எழுத்தும்,சிகாரத்தின்நடுவில் உருத்திரனும்.பார்வதியும் .அமர்ந்திருப்பர்.இது அக்னி நிறமுடையது.
மனிதன் உணர்ச்சியாலும் அறிவாலும், ஆனவன்  அதன் மையப்புள்ளி நெஞ்சு.
              உலகத்தில் அன்பு கருணை பாய்ச்சுபவர்கள், அதனை உலகெங்கும் வழிந்தோட விடுபவர் குண்டலினி அனாகத நிலையில் உள்ளவர்கள். அனாகத நிலைவரை குண்டலினி மேல்எழுந்து இறங்குவது சுலபம்..பலருக்கு இந்நிலை வாய்க்கும். ஆனால் அனாகதம் கடப்பது என்பது மிகச்சிலருக்கே சாத்தியம்.
           காரணம் மூலாதாரம், சுவாதிட்டானம் இவை இரண்டும்  பஞ்சபூதங்களில் பூமியுடன் தொடர்புடையது. மணிப்பூரகம், அனாகதம் இரண்டும் தண்ணீருடன் தொடர்புடையவை. விசுத்தி காற்றுடனும். ஆக்ஞா நெருப்புடனும் சம்மந்தம் உடையவை.
          மண்ணும் நீரும் கீழ் நோக்கி பாயும் வலிமை பெற்றவை.காற்றும் நெருப்பும். மேல் நோக்கிப்பாயும் வலிமை உடையவை.அனாகதம் கீழ் மேல் நிலைகளின் சங்கமம்.
            இங்கிருந்து மனிதன் கீழ் நோக்கிப் பயணித்து விலங்கானதும் உண்டு. வீணானதும் உண்டு. மேல் நோக்கிப் பயணித்து கடவுளாவதும் உண்டு. எனவே கடவுள்+விலங்கு என்பதன் மையப்புள்ளியாகிய மனிதன் நெஞ்சை (அனாகதத்தை) தட்டி தட்டி நான் நான் என்று வயிற்றிலும் மார்பிலும் தட்டிக்கொள்கிறான்.
               விசுத்தி ஆக்ஞை சகஸ்ரம் என்று மேல் நோக்கிப் பாய்ந்து விட்ட ஞானிகள், சித்தர்கள்,மகான்கள்கூட அனாகதம் வரை கீழிறங்கி வந்து மனிதநிலையில் நம்முடன் வாழ்ந்து அன்புகாட்டுவார்கள். அதைவிட கீழிறங்கி மணிப்பூரகம், சுவாதிட்டானம், மூலாதாரத்தில் இருந்து கீழான வாழ்வு வாழ  மாட்டார்கள்.
           மூலாதாரம் முதல் அனாகதம் வரை உணர்ச்சி மையம். அனாகதம் முதல் துரியம் துரியாதீதம் வரை அறிவு மையம்.எனவெ அனாகதம் அறிவும் உணர்ச்சியும் சந்திக்கின்ற மையப்புள்ளி.

           மருத்துவ உலகின் கணிப்பின்படி இதயம் என்பது குடிடிநீர் வடிகால் வாரியம் அமைந்திருக்கும் பம்ப்பிங் ஸ்டேஷன் மாதிரிதான்.கழிவு பொருள்களை சுமந்த அழுக்கு ரத்தத்தைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாய் மாற்றி உடம்பு முழுக்க பம்ப் செய்யும் தசை மோட்டார் அது.
           இதயத்தில் நான்கு அறைகளிலும் தனித்தனியாக நல்ல ரத்தமும் கெட்ட ரத்தமும் உண்டு.மொத்தமாகப் பார்தால் நல்லதும் கெட்டதும் சுமந்தது இதயம்.நல்லது கெட்டதின் மையப்புள்ளி அது. மருத்துவம் கடந்து ஆன்மீகமாக இதயத்தை கவனித்தால் நல்லது கெட்டது கலந்த மனிதனின் மையம் இதயம்.எவ்வளவு பொருத்தம் பார்தீர்களா?
          ஞானம் நெருப்பாய் எரியும் ஆக்ஞையில் நிற்பவர்கூட கருணை காரணமாக அனாகதத்தில் நின்று தண்ணீராய் குளீர்வார்கள்,கருணைப் பொழிவார்கள், ஞானிகளும் ரிஷிகளும் சித்தர்களும்.இவர்களை துணைகொண்டு வாருங்கள் அடுத்த சக்கரமான விசுத்தி சக்கரத்திற்க்கு போகலாம்.
        அன்புன் ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.
         
         

இளையான்குடி மாறநாயனார்.வரலாறு.


           இளையான்குடி மாறநாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி என்னும் ஊரில் ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் இளையான்குடியில் பிறந்ததால் இளையான்குடி மாறனார் என்று அழைக்கப்பட்டார்.
            இவர் எந்நேரமும் நமச்சிவாய என்னும் திருமந்திரத்தை நினைத்துக் கொண்டிருப்பவர். இவரும், இவர் மனைவியும் தன் வீடு தேடி வரும் அடியார்களை வரவேற்று பாதபூஜை செய்து உணவளிப்பதையே பணியாக கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் வீட்டில் லட்சுமிதேவி நிரந்தரமாக குடியிருந்தாள்.
             ✫ அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்யவல்லார் இவர் என்னும் உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இதனால் இவரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்களை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார்.
             ✫ இவ்வாறு மாரிக்காலத்தில் ஒருநாள், தாம் உணவின்றிப் பசியால் வாடியபோதும் இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான், அடியார் கோலங்கொண்டு இவரது மனைக்கு எழுந்தருளிக் கதவைத் தட்டி அழைத்தார். இவர் கதவைத் திறந்து அடியாரை வீட்டினுள் அழைத்து வரவேற்று மழையில் நனைந்த அவரது மேனியில் விழும் ஈரத்தை துவட்டச்செய்து ஆசனத்தில் அமர்த்தினார். சற்று பொறுங்கள் சூடாக உணவளிக்கிறேன் என்று கூறினார்.
           ✫ இந்த நிலையிலும் தனக்கு வந்த சோதனையை எண்ணி மனம் தளராமல் மனைவியிடம் அடியாரின் பசியைப் போக்குவது பற்றி விசாரித்தார். அந்நேரம் இவரது மனைவி, கழனியில் காலையில் விதைத்த நெல்லை எடுத்துவந்து குத்தி அரிசியாக்கி அடியாருக்கு உணவளிக்கலாம் எனக் கூறினார். இவரும் மழையைப் பொருட்படுத்தாமல் கழனியிலிருந்து நெல்லை எடுத்துவந்தார். இவர் மனைவி தோட்டத்திலிருந்த கீரையை பறித்து வந்து சூடாக உணவு சமைத்தார். பிறகு அடியாரை உணவருந்த அழைத்து அவரை வணங்கி எழுந்தபோது அடியாரைக் காணவில்லை.

          ✫ அப்பொழுது அடியாராக வந்திருந்த சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் எழுந்து தோன்றினார். அது கண்டு இருவரும் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, 'அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ உன் மனைவியோடும் என் பெரும் உலகமாகிய சிவலோகத்தினை அடைந்து பேரின்பம் அனுபவித்திருப்பாயாக" என்று அருள் செய்து மறைந்தருளினார்.
        (அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.)

திங்கள், 11 ஜூலை, 2016

மணிப்பூரகம் மூண்றாவது சக்கரம்.

          மணிப்பூரகம் (மேல்வயிறு)-  
             இது (தொப்பூழ்) சுவாதிட்டானத்தில் இருந்து எட்டுவிரல் அளவு மேலே நெஞ்சுக்குழி என்னும் இடத்தில் கோழி முட்டையை போன்று 1008-நாடிநரம்புகளும் சூழ நாடி நரம்புகளுக்கெல்லாம் வேர் போல் உள்ளது.இதை உந்திக்கமலம் என்று கூறுவர் இது தொப்புழுக்கு நேரில் அப்பு நிலையில்.ஏழாம் பிறைக்கு இணங்கி இருக்கும்.இதன் நடுவில் பத்து இதழுடைய மலர் வட்டமும்:அதன் நடுவில் (மகார)எழுத்தும் மகாரத்தின் நடுவில், மகாவிஷ்ணும், மகாலட்சுமியும் எழுந்தருளியிருப்பர்.இது பச்சை நிறமுடையது .
           தியானம் செய்யும் போது பச்சை நிறம் வந்து வந்து  போனால் குண்டலினி சக்தி மணிப்பூரகத்தை தொட்டு தொட்டு செல்கிறது.தொடர்ந்து பச்சைநிறம் நீடித்தால் குண்டலினி அங்கேயே இருக்கிறது .எனலாம் இது தியானத்தில் அறிவது.
              மனிதனிடம் இங்குதான் நான் என்னும் அகங்காரம் தோன்றுகிறது .கணவன் மனைவி கருத்து வேறுபாடு இந்த இருபது வருத்தில் பெருசா எனக்கு என்ன செஞ்சீங்க....? ஏதாவது சந்தோஷப் படறாப்ல வாங்கித்தந்தது உண்டா.?என்று பொருமுகிறால் மனைவி .எங்க .உன் நெஞ்சில் கைவைத்து சொல்லு! என்று கணவன் அலறுகிறான்.ஒரு நிமிடம் ஏன் நெஞ்சில் கைவைக்க வேண்டும்? யோசியுங்கள்.

               மரணத்தால் கணவனை பிரிந்த துயரத்தில் அழுகிற மானைவி" என்னை விட்டுப் போய்டீங்களே" என்று அலறுகின்ற போது ' என்னை என்று' என்ற பாவனைக்கு அடையாலமாக நெஞ்சிலே அடித்துக்கொள்கிறாளே ஏன்?
யோசியுங்கள்.
             "நானா  ஏமாத்துவேன் ....நானா ஏமாத்துவேன்'' என்று வருந்துகிற நண்பன் நான் என்கிற போதெல்லாம் இதயத்தில் கைவைத்துக் கைவைத்துப் பேசுவது ஏன்? யோசியுங்கள்.
             நான் என்கிற பாவம் நெஞ்சுடன் தொடர்புடையவையா? மனிதன் உணர்ச்சியின் மொத்த வடிவம்.உணர்ச்சியின் மைய்யப்புள்ளி நெஞ்சு.கோபம், தாபம், காமம், கொடூரம், வஞ்சனை என்கிற உணர்ச்சிகளின் வேறுபாட்டை துள்ளியமாக உணர்த்தும் சதைத்துண்டு மைய்ய வட்டம் நெஞ்சு. அதுதான் உணர்ச்சி மைய்யம்.மணிப்பூரக சக்கரத்தில் இயங்கும் உடல் உறுப்புகளில் கல்லீரல், கணையம், இறைப்பை ஆகியவை இந்த சக்கரத்தில் அடங்கும்.
            உடம்பில் சக்கரையைச் செரித்துச் சமன் படுத்தும் இன்சுலின் சுரக்கும் சுரப்பி இச்சக்கரத்தில் அடக்கம். சில நேரங்களில் சுறு சுறுப்பு.சில நேரம் சோம்பல். உண்டுபண்ணும் அட்ரினல் என்னும் நாலமில்லா சுரப்பிகள்.இந்த சக்கரத்தின் அங்கமே. தலைமையுணர்வு,  சீரான ரத்த ஓட்டம்,  உழைப்புக்கான உடல் வெப்பம்  ஆகியவற்றை அட்ரினல்சுரப்பி தான் தீர்மானிக்கிறது. இந்த மணிப்பூரக சக்கரம் உணர்ச்சி மையமானதால் அடிக்கடி உர்ச்சி வசப்பட்டதால் தான் இரத்த அழுத்த நோய்.நீரிழிவு.நோய் வருகிறது, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தியானம்,  செய்யும் பொது மேல் வயிறான நெஞ்சுக்குழியில் கவனம்.செய்து வந்தால் .நோய் தீரும்.
           பத்துபேர் பயணம் செய்கின்ற இடத்தில் சாப்பிட படபடப்பவன். சுவாதிடான நிலையில் குண்டலினி எழுந்த நிளையாளர்.தன்னோடு வந்த எல்லோரும் சாப்பிட்டார்களா? கவலைப்படுதல் மணிப்பூரக நிலை. 
                 அந்தொ ...மனித குலம் முழுமைக்கும் உணவு கிட்டியதா?  என்று வடலூர் வள்ளளார் போல் வாடுபவர்களின் குண்டலினி அநாகதத்தில் நிற்க்கிறது.வாருங்கள் நாமும் அநாகதம் நோக்கிப் பயனப்படுவோம்.
        அன்பு ஆத்மா த.சிவகிரி .ஓம் சிவார்ப்பணம்.
             

சனி, 9 ஜூலை, 2016

திருவெறும்பூர் எறும்பீசுவரர் திருக்கோவில்.

           திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்   
             திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சை செல்லும் பாதையில் 13 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு சிவத்தலமாகும்.

              இக்கோவில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு சிறு குன்றின் மீது உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஏழாவது சிவத்தலமாகும்.
                தல வரலாறு :  
         தாருகா சூரன் எனும் அரக்கன் மிகுந்த வரபலத்தால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அஞ்சி பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்தில் உள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்குச் சென்று இறைவனைப் பூசித்தால் தாருகனை அழிக்கக் கூடிய ஒரு புதல்வனை அருள்வார் என்று கூறினார் தேவர்களும், தாருகனுக்குப் பயந்து எறும்பு உருவம் கொண்டு இத்தலத்தை அடைந்து இறைவனைக் கண்டு தங்கள் குறைகளைக் கூறினார்கள். தேவர்களும், இந்திரனும் எறும்பு உருவம் எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊர்ந்து ஏறும்போது, ஏற முடியாமல் தவித்தனர். உடனே இறைவன் சற்றே தலை சாய்த்து, சரிந்து கொடுத்தான். இதனால்தான் இத்தலம் திரு எறும்பூர் என அழைக்கப்படுகிறது.
            தலை வணங்கிப் போற்றும் அடியார்க்கு இறைவனும், தலை வணங்கி அருள் செய்கிறான் என்பதை உணர்த்தவே இங்கு பெருமான் இன்றும் திருமுடி சாய்ந்து தலைவணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். இறுதியில் தாருகா சூரனும் வதம் செய்யப்பட்டார்.

            கோவில் அமைப்பு :
      ✷ சுமார; 250 அடி உயரமுள்ள குன்றின் மீது கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 125 படிக்கட்டுகள். இடையே இளைப்பாற மண்டபங்கள் உள்ளன.
          ✷ குன்றின் கிழக்கு நுழைவாயிலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலப்புறம் ஆஞ்சநேயரின் சன்னதிகளும் உள்ளன. இங்கிருந்து பார்த்தால் திருச்சி மலைக்கோட்டையின் ரம்மியமான தோற்றம் கண்களைக் கவரும்.
         ✷ கோவிலுக்கு முன்னே கொடித்தூண், பலிபீடம் நந்தி மண்டபம் உள்ளன. கருவறைக்கு முன் முக மண்டபமும், அதனையொட்டி திருச்சுற்றும் உள்ளன.
          ✷ திருச்சுற்றில் முருகன், சப்த கன்னியர், பிள்ளையார், காசி விசுவநாதர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், ஆடல்வல்லான், சூரியன் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம்.
         ✷ கருவறையின் வெளிப்புறச் சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, நான்முகன், துர்க்கை ஆகியோரது திருமேனிகளையும் காணலாம்.

            தல சிறப்புகள் :  
           முற்றிலும் கற்களால் அமைக்கப்பட்ட கருவறை கொண்டது இத்தலம். மூலவர் லிங்கம் மண்புற்று வடிவில் அமைந்துள்ளது. எனவே நேரடியாக அபிஷேகம் செய்யாமல், நீர்புகாதவாறு கவசம் பொருத்திய பின் அபிசேகம் செய்யப்படுகின்றது. வடபுறம் சாய்மானமாக உள்ள ஈசன் திருமேனி (எறும்புகள் ஊற இயலும் வண்ணம்) மேற்புறம் சொரசொரப்பாகவும் உள்ளது. சிவலிங்கத்தின் மீது எறும்புகள் ஊர்ந்த அடையாளங்களைக் இங்கு காணலாம்.
         அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பணம்.

வெள்ளி, 8 ஜூலை, 2016

இராசி கற்களின் பலன் அறிவோம்!

            இராசி கற்கள் மற்றும் அதன் பலன்கள்   இராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான இராசி கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும்.
          இராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது இராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. ஆனால் இராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த இராசிக்காரர்களுக்கு எந்தெந்த இராசி கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது இராசிக்கு பொருத்தமில்லாத இராசி கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சில சமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம். எனவே, எந்தெந்த இராசிக்கு எந்தெந்த இராசிக் கற்கள் பொருத்தமானவை என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
        இராசி மற்றும் கற்கள்:
        இராசி            கற்கள்
        மேஷம்           பவளம்
        ரிஷபம்          வைரம்
        மிதுனம்         மரகதம்
        கடகம்             முத்து
        சிம்மம்           மாணிக்கம்
        கன்னி            மரகதம்
        துலாம்            வைரம்
       விருச்சிகம்      பவளம்
       தனுசு               கனக புஷ்பராகம்
       மகரம்               நீலக்கல்
       கும்பம்             நீலக்கல்
       மீனம்               கனக புஷ்பராகம்
        ராசி கற்களின் பலன்கள் :
       மேஷ ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிஷ்டம் உண்டாகும்.
          ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
            மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிஷ்டத்தையும் அளிக்க வல்லது.
        கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.

         சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிஷ்டசாலியாகலாம்.
              கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிஷ்டத்தையும் அளிக்க வல்லது.
             துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.

            விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிஷ்டம் உண்டாகும். 

            தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
             மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
            கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது.
           மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

பூதத்தாழ்வார் வரலாறு.

            பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார்  பூதத்தாழ்வர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள், முதலாழ்வார்கள் மூவருள் இரண்டாம் இடம் வகிப்பவர். இவர் கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திலே, மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு, ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் திருமாலின் ஆயுதமாகிய கொளமேதகியின் (கதை) அம்சமாக தோன்றினார். இவர் காலம் 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
                      வரலாறு
        ✶ இவர் அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும், பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் இவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் இவரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர். இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.
            ✶ இவர் 'நமோ நாராயணா" என்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து, உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும், நிற்கும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிழ்ந்தார். இவர் உலகப்பற்றை அறவே நீத்தவர். இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.
              ✶ இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். இறைவன், இவர்களால் உலகை உய்விக்கக் கருதி, திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில், இம்மூவரையும் ஒன்று சேர்த்துத் தானும் அவர்களுக்கிடையில் நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினார்.
             ✶ நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். இவர் அன்பாகிய தகழியில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர்.
      அன்பு ஆத்மா த.சிவகிரி. ஓம் சிவார்ப்பணம்.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பாம்பாட்டி சித்தர் வரலாறு.

                 பாம்பாட்டி சித்தர்.  
            பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். பாம்பாட்டி சித்தரின் காலம் கி.பி 1200 ஆகும். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
            இவரது குரு சாட்டைமுனி ஆவார். படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால் இப்பெயர் அமைந்தது.
             சித்தர் வரலாறு :
        பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது. இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார்.

           ஒருநாள் சிலர், மருத மலையின் மீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலையுயர்ந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன் திறனுள்ள பெரிய பாக்கியசாலி என்றும் பேசினார். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்றார். பாம்பைத் தீவிரமாக தேடினார்.

          அப்போது திடீரென பலத்த சிரிப்பொலி கேட்டுத் திரும்பினார். அங்கே மிகப் பிரகாசமான ஒளியோடு சாட்டைமுனி சித்தர் நின்றார். ″இங்கு எதைத் தேடுகிறீர்கள்?″ என்று வினவினார். அதற்கு பாம்பாட்டி சித்தர் ″நான் நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன், அதைக் காணவில்லை″ என்றார். இதைக் கேட்ட சாட்டைமுனி சிரித்தார். ″நவரத்ன பாம்பை உனக்குள் நீயே வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயல் அல்லவா! மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டுவிட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே″ என்றார்.

         எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.

                சிறப்புகள் :
        கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி என்றும் கூறப்படுகிறது. பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
          இவரது படைப்புகள் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியனவாகும். பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது, அதோடு விளையாடுவது, இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
       பாம்பாட்டி சித்தர் 123 வருடங்கள் 32 நாட்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் மருதமலையில் சித்தியடைந்ததாகச் சிலரும், துவாரகையில் சித்தியடைந்ததாகச் சிலரும், விருத்தாச்சலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர். இருப்பினும், மூன்று இடங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.
        அன்பு ஆத்மா த.சிவகிரி ஓம் சிவார்ப்பணம்.

அப்பூதியடிகள் வரலாறு.

            நாயன்மார்களில் ஒருவரான அப்பூதியடிகள்.

         அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

            திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார் அப்பூதியடிகள்.
             இதுவே அவரை ஒரு நாயன்மாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.  தாம் அமைத்த திருமடம், தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
           திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார், அப்பூதியடிகள் புரிந்த தர்மங்களை மற்றவர்களிடம் கேட்டு அறிந்து திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார். திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.
           அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து மகிழ்ந்தார். சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். அப்பூதியடிகளார் மனைவி அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதற்காக தம் பிள்ளைகளில் மூத்த மகனை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.  

           அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு, திருநாவுக்கரசரை உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
        அன்பு ஆத்மா த.சிவகிரி.ஓம் சிவார்ப்பணம்.